ராஜினாமாவை திரும்பப் பெற நிதிஷ் மறுப்பு! புதிய முதல்வராக ஜிதின்ராம் மஞ்சியை பரிந்துரைத்தார்!!
பாட்னா: லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் படு தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிதீஷ் குமார் தமது முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்துடன் புதிய முதல்வராக ஜிதின்ராம் மஞ்சியை ஆளுநரிடம் பரிந்துரைத்தும் இருக்கிறார்.
ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் நிதீஷ்குமாரையே சட்டசபை கட்சித் தலைவராக அதாவது முதல்வராக எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். இதனால் நிதீஷ் குமார் மீண்டும் பதவியில் நீடிக்க கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் நிதீஷின் ராஜினாமாவையும் எம்.எல்.ஏக்கள் நிராகரித்து விட்டனர். இதுகுறித்து கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், நாங்கள் நிதீஷ் குமாரின் ராஜினாமாவை ஏற்கவில்லை. அவர் இல்லாமல் பீகார் மாநிலம் முன்னேற முடியாது என்றார்.
திட்டவட்டம் - புதிய முதல்வர் மஞ்சி தேர்வு
இதையடுத்து தனது முடிவை மறு பரிசீலனை செய்ய ஒரு நாள் அவகாசம் தருமாறு நிதீஷ் குமார் கட்சியைக் கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று நிதிஷ்குமார் திட்டவட்டமாக ராஜினாமாவை திரும்பப் பெற போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளார்.
இதனால் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாரிடம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆளுரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய முதல்வராக முதல்வராக அமைச்சர் ஜிதின்ராம் மஞ்சியை பரிந்துரைத்துள்ளார். கட்சியில் சர்ச்சையில் சிக்காத சீனியர் என்பதால் அவரையே தேர்ந்தெடுத்திருக்கிறார் நிதிஷ்.
லோக்சபா தேர்தலில் கயா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மஞ்சி என்பது குறிப்பிடத்தக்கது.
யாதவுக்கு எதிராக போர்க்கொடி
இதற்கிடையே, கட்சிக்கு பீகாரில் கிடைத்த மோசமான முடிவுக்கு கட்சித் தலைவர் சரத் யாதவ்தான் காரணம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார். ராஜினாமா செய்ய வேண்டியது யாதவ்தான், நிதீஷ் குமார் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதீஷ் குமாருக்கும், யாதவுக்கும் எப்போதுமே ஆகாது என்பது நினைவிருக்கலாம். ஆளுக்கு ஒரு பக்கமாகத்தான் கட்சியில் நீடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக மும்முரம்
முன்னதாக நேற்று பா.ஜனதா மூத்த தலைவர் சுஷில் மோடி தலைமையில் கட்சியின் தூதுக்குழுவினர், மாநில கவர்னர் டி.ஒய்.பாட்டீலை சந்தித்தனர். அவர்கள் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தனர்.
மேலும், பீகாரில் நிதிஷ்குமார் அரசு பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், அரசுக்கு ஆதரவு தர உள்ள எம்.எல்.ஏ.க்களை தன் முன் ஆஜர்படுத்துமாறு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கட்சிகள் நிலவரம்
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 115 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 89 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டீரிய ஜனதாதளத்துக்கு 21 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 8 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில்தான் பீகார் சட்டசபையின் ஆயுள் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.