ஜார்க்கண்ட்டில் பாஜக தனித்து ஆட்சி! கை கொடுத்தது ஜே.வி.எம்! கட்சியையே இணைப்பதாக அறிவித்தது!!
ராஞ்சி: அறுதி பெரும்பான்மை பெறமுடியாமல் தவித்த பாஜகவுக்கு, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியில் இருந்து அருமருந்தாக ஒரு தகவல் வந்துள்ளதது. அதாவது பாஜகவுடன் தங்கள் கட்சியை இணைத்துக்கொள்ள சம்மந்தம் தெரிவித்துள்ளதுதான் அந்த முடிவு.
81 சட்டசபை தொகுதிகளை காொண்ட ஜார்கண்டில் ஆட்சியமைக்க தேவை 41 எம்.எல்.ஏக்கள். ஆனால், மாலை 5.45 மணி நிலவரப்படி பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 7 இடங்களில் அக்கட்சி முன்னணியில் இருந்தது. எப்படிப்பார்த்தாலும், 38 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகள்தான் பாஜகவுக்கு கிடைக்கும் என்ற நிலை.
இந்நிலையில் பாபுலால் மரான்டி தலைமையிலான ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 7 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. எனவே அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்டணியே வேண்டாம், கட்சியையே பாஜகவுடன் இணைத்துக்கொள்ளலாம் என்கிறது ஜேவிஎம் கட்சி.
கரும்பு தின்ன கூலியா என்ற கொண்டாட்ட நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் 38 + ஜேவிஎம் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் இணைந்தால் 46 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்துவிடலாம்.
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்த முடிவை திடீரென எடுக்கவில்லை. நம்மூர் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள், அதிமுகவுடன் சேர்ந்து செயல்படுவதை போலவே, ஜேவிஎம்மின் 3 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்திருந்தனர். ஜேவிஎம்மை கலைக்க வேண்டும் என்றும் கோரிவந்தனர்.
இந்நிலையில்தான், அக்கட்சியின் தலைவர் பாபுலால் மரான்டி, தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை அடைந்துள்ளார். எம்.எல்.ஏக்களிடம் மட்டுமின்றி, மக்களிடமும் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டதால் கட்சிக்குள் விரிசல் அதிகரித்துள்ளது. எனவே பாஜகவுடன் கட்சியை சேர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு கட்சி தலைவர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.