காங்கிரஸுக்கு குட்பை சொல்லும் ஜோதிராதித்ய சிந்தியா- தனிக்கட்சியா? பாஜகவா?
போபால்: காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விரைவில் விலகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸை விட்டு வெளியேறும் ஜோதிராதித்ய சிந்தியா தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது பாஜகவில் ஐக்கியமாவாரா என்கிற புதிருக்கு விடை கிடைக்கவில்லை.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயர் அடிபட்டது. ஆனால் மூத்த தலைவரான கமல்நாத்துக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
அப்போது முதலே ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில்தான் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கமல்நாத் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தம்மை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனால் டெல்லி மேலிடம் சிந்தியாவை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது.. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ முறையீடு
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார் சிந்தியா. இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா எந்த நேரத்திலும் காங்கிரஸை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது. அப்படி காங்கிரஸில் இருந்து விலகும் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? பாஜகவில் ஐக்கியமாவாரா? என்பதுதான் இப்போதைய விவாதம்.