கன்னட அமைப்பினர் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாத போலீஸ்.. பெங்களூர் தியேட்டர்களில் காலா ரத்து!
Recommended Video
பெங்களூர்: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை வெளியிட கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பெங்களூரிலுள்ள அனைத்து மால்கள் மற்றும் தியேட்டர்களில் படம் திரையிடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், கர்நாடக அணை கட்டுப்பாடு வாரியத்திடம் செல்ல வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
காவிரி தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துவிட்டதாக கோபமடைந்த கன்னட அமைப்பினர், அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கைவிடுத்து காலா திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்போம் என அறிவித்தனர்.
கன்னடத்தில் கோரிய ரஜினிகாந்த்
இதனிடையே ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டியின்போது, நான் எந்த தப்பும் செய்யவில்லை என்பதால் கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என கன்னடத்தில் கோரிக்கைவிடுத்தார். ஆனால் இதை ஏற்க கன்னட அமைப்பினர் தயாராக இல்லை. இதனிடையே கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் காலா திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்தார்.
காலை முதல் கியூ
இதை நம்பி ஏராளமான ரசிகர்கள் பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களிலுள்ள தியேட்டர்களில், காலை முதல் ரசிகர்கள் கியூவில் நின்றனர். காலை 11 மணிக்கு முதல் ஷோ காண்பிக்கப்படும் என தியேட்டர் நிர்வாகங்கள் அறிவித்திருந்தன. ஆன்லைனிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்திருந்தனர்.
மிரட்டல்கள்
இந்த நிலையில், காலை முதலே கன்னட அமைப்பினர் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் துவங்கிவிட்டனர். சில தியேட்டர்களில் தமிழ் ரசிகர்களை மிரட்டி வெளியே அனுப்பினர். மல்லேஸ்வரம் பகுதியிலுள்ள மால் ஒன்றில், தியேட்டர் ஊழியரை மோசமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இருப்பினும் தியேட்டர்கள், மால்கள் முன்னிலையில், போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
போலீசாரால் முடியவில்லை
கன்னட அமைப்பினர் போராட்டம் அதிகரித்த நிலையில், போலீசாரே, காத்திருந்த ரசிகர்களை அணுகி, தியேட்டரை விட்டு வெளியேறுமாறு கூறத்தொடங்கிவிட்டனர். நீங்கள் படத்தில் பார்ப்பது பெங்களூரின் எம்ஜிரோடு அருகேயுள்ள லிடோ மாலில் ரசிகர்களை போலீசார் வெளியேற்றிய காட்சிதான். ஆண், பெண், இளைஞர், மாணவிகள் என காலை முதல் காத்திருந்த அனைத்து தரப்பு ரசிகர்களும், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் நொந்து திரும்பினர். பெங்களூரின் அனைத்து மால், தியேட்டர்களிலும், மைசூர், மங்களூரிலுள்ள தியேட்டர்களிலும் இதே நிலை ஏற்பட்டது. பெங்களூரை சேர்ந்த தமிழ் ரசிகர்கள் பலரும் ஒசூர், கிருஷ்ணகிரி போன்ற தமிழக நகரங்களிலுள்ள தியேட்டர்களுக்கு படையெடுத்துள்ளனர்.