நாடாளுமன்றத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை: கனிமொழி குரலுக்கு செவிசாய்த்த நாயுடு
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரியினால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இரு அவைகளிலும் அனலை கிளப்பியுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து திமுக எம்.பி கனிமொழி ராஜ்யசபாவில் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் டி.என்.சீமா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த புகார் தொடர்பாக, தனக்கு உரிய தகவல் அளிக்குமாறு மக்களவைச் செயலரிடம் வெங்கய்ய நாயுடு கோரியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாற்றி வரும் பெண்ணை அவரது கண்காணிப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ள சம்பவம் குறித்து புதன்கிழமையன்று இரு அவைகளிலும் குறிப்பிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த பெண், கடந்த 2011-ம் ஆண்டு முதல் பி.வி.ஜி. இந்தியா லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனம் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. பி.வி.ஜி. நிறுவனமே அந்தப் பெண்ணை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது பணியமர்த்தியுள்ளது. 2013 முதல் அவர் அங்கு பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு புதிதாக ஆண் மேற்பார்வையாளர் ஒருவர் வந்து சேர்ந்தார்.
பாலியல் துன்புறுத்தல்
அந்த மேற்பார்வையாளர் தன்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்து ஆபாசமான முறையில் பேசியதோடு அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பது அந்த பெண்ணின் புகாராகும். இதுகுறித்து மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்து எந்த வித நடவடிக்கையில்லையாம் மாறாக ஏளனப்பேச்சுதான் பதிலாக கிடைத்துள்ளது.
பணியிட மாற்றம்
இது குறித்து டெல்லி கனோட் பிளேஸில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கிறார் அப்பெண். அதனையடுத்து, அவருக்கு லோக்சபாவில் துப்புரவுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை பணியிட மாற்றம் செய்தது அவருக்கு மேலும் மன உளைச்சலை அளித்திருக்கிறது. தனது பிரச்சினையை சொல்வது என பரிசீலித்து லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆங்கில நாளிதழில் பேட்டி
ஏப்ரல் 2015-ல், பிவிஜி நிறுவனம் அந்தப் பெண்ணை அழைத்து மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்குவதாகக் கூறினர். மேலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளாரையும் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர். ஆனால், இதுநாள் வரை அந்த மேற்பார்வையாளர் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டி வெளியானது.
கனிமொழி எழுப்பிய குரல்
இது தொடர்பாக புதன்கிழமையன்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, "நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்கு தீர்வு காண எவ்வித உதவியும் பெறமுடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை" என்றார்.
உறுப்பினர்கள் ஆதரவு
கனிமொழி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் டி.என்.சீமா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். சீதாராம் யெச்சூரி துப்புரவுப் பணியாளர் செய்தி வெளியாகியிருந்த ஆங்கில செய்தித்தாளை உயர்த்திக்காட்டினார்.
சிறப்பு கவனஈர்ப்பு நோட்டீஸ்
இப்பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார். இதேபோல், இப்பிரச்சினை மக்களவையிலும் எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஏ.சம்பத் பேசும்போது, "இத்தகைய சம்பவங்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு உகந்தது அல்ல" என்றார்.
வெங்கய்யா நாயுடு பதில்
இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்ற பணியாற்றும் துப்புரவு பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக லோக்சபா செயலர் தகவல் அளிக்க வேண்டும்" என்றார்.