மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்: ராஜ்யசபாவில் சட்ட மசோதா தாக்கல் செய்தார் கனிமொழி
டெல்லி: மரண தண்டனைக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்த நிலையில், மரண தண்டனைக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பியான, கனிமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று காலை மசோதாவை கனிமொழி சமர்பித்தார். அடுத்த கூட்டத்தொடரின் முதல் வெள்ளிக்கிழமையன்று தனி நபர் மசோதா சபைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்பிறகு ஒருநாள், மசோதா மீது விவாதம் நடைபெறும்.
மசோதாவுக்கு ஆதரவு கிடைத்தால், அது சட்டவடிவம் பெறும். ஏற்கனவே, தி.மு.க எம்.பி திருச்சி சிவா, திருநங்கைகள் உரிமை சட்டமசோதாவை தனி நபர் சட்ட மசோதா என்ற வகையில் தாக்கல் செய்து, அது ஒரு மனதாக நிறைவேறியது நினைவிருக்கலாம்.