காவிரிக்காக கன்னட அமைப்புகள் மீண்டும் போராட முடிவு- பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூரு: காவிரி விவாகாரத்தில் கன்னட அமைப்புக்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெங்களூரில் இன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் மீண்டும் கர்நாடகம்-தமிழகம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களாகவே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
தமிழகர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகம்-கர்நாடகாவிற்கிடையே 13-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரு மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 20ம் தேதி வரை விநாடிக்கு 12000 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் இன்று நடக்கவிருப்பதால் கர்நாடகத்தில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் கார்நாடகாவில் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், இன்று மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மண்டியா மாவட்டத்தில் மண்டியா, மத்தூர், ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபுரா வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகமங்களா, மலவள்ளி, கே.ஆர்.பேட் வட்டங்களில் பட்டப்படிப்புக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூலு, மைசூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.