கர்நாடக சட்டசபைக்குள் செல்போனில் பெண்கள் போட்டோ பார்த்த எம்எல்ஏ.. சொன்ன காரணம், அடடே
பெல்காம்: கர்நாடக சட்டசபைக்குள் செல்போனில் பெண் புகைப்படத்தை பார்த்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ அதற்கு அளித்த விளக்கம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
கர்நாடகாவில் இவ்வாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் கொள்ளேகால் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என்.மகேஸ் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், கடந்த அக்டோபரில் தனிப்பட்ட காரணங்களை சுட்டிக் காட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மகேஷ்.
இந்த நிலையில், பெல்காமிலுள்ள சுவர்ண சவுதாவில், தற்போது கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மகேஷ் பங்கேற்றுள்ளார். அவர், சட்டசபை நடந்துகொண்டிருந்தபோது, செல்போனில் பெண்களின் படங்களை பார்த்துக்கொண்டிருந்த வீடியோ மீடியாக்களில் வெளியானது.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி மகேஷ் அளித்துள்ள விளக்கத்தை பாருங்கள்.. "சட்டசபைக்குள் செல்போனை பயன்படுத்தியது தவறுதான். ஆனால், பெண் படத்தை எதற்காக பார்த்தேன் என்றால், எனது மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டுள்ளேன். அதற்காகத்தான், செல்போனில் போட்டோக்களை பார்த்தேன். ஆனால், ஊடகத்தினர் பரபரப்புக்காக ஏதேதோ செய்தி வெளியிட்டுள்ளனர். எதை எடுத்தாலும் பரபரப்பா? இவ்வாறு மகேஷ் கேள்வி எழுப்பினார்.