மேகதாது அணையை எதிர்த்து பிரதமரிடம் மனு கொடுப்பது ஜெ.வின் அரசியல் நாடகம்- சித்தராமையா
பெங்களூரு : மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே, மேகதாது எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
மேகதாது அணைத் திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது.
கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நெசவாளர்கள் தின விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த மனுவில் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு அளித்தது அரசியல் நாடகம் என்றும் கூறியுள்ளார்.
அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்றும், அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ கர்நாடகாவிற்கு பின்னடைவு ஏதும் இல்லை எனவும் சித்தராமையா கூறினார்.