சசிக்கு சிறையில் சலுகை தர நான் அறிவுறுத்தவில்லை... சித்தராமையா விளக்கம்!
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டிஜிபிக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சலுகைகள் வழங்குமாறு தான் எந்த அறிவுறுத்தலையும் ஏடிஜிபிக்கு வழங்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.
டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டையடுத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி கர்நாடக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது குறித்து அரசு உத்தரவின் பேரில் சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தங்களது விசாரணையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனிடையே முதல்வர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என கர்நாடக ஐகோர்ட்டில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா மனு செய்துள்ளார்.
தம் மீதான குற்றச்சாட்டு குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது : சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருமாறு தாம் கூறவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கும் வசதிகள் கூட சசிகலாவிற்கு சிறையில் தரப்படவில்லை என தமிழகத்தில் இருந்து வந்த கடிதத்தின் பேரிலேயே சசிகலாவிற்கு வசதி செய்து தர கூறினேன். சட்டத்திற்குட்பட்டு சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் செய்து தருமாறு அறிவுறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.