கர்நாடக தேர்தல்: அனைத்து மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி.. புதிய சாதனை படைத்தார்!
கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குதித்து இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அந்த மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்து இருக்கிறார்.
பெங்களூர்: கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குதித்து இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அந்த மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்து இருக்கிறார். இதன் மூலம் அவர் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத புதிய சாதனையை செய்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மைசூரில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல், ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்தார். எல்லா மாவட்டத்திற்கும் செல்ல வேண்டும் என்று அவர் முடிவெடுத்து இருந்தார்.
கடந்த 100 நாட்களுக்கு முன்பே அவர் பெல்லாரி சாலையில் இருந்தே அவருடைய பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தம் 30 மாவட்டங்களையும் அவர் இத்தனை நாட்களில் கடந்து இருக்கிறார். அதாவது 30 மாவட்டங்களில் உள்ள சின்ன நகரம், பெரிய நகரம், கொஞ்சம் பிரபலமான நகரம் என எல்லா பகுதிகளுக்கும் அவர் சென்றுள்ளார்.
இதில் ராகுல் மொத்தம் 20 கோவில்களுக்கு சென்று இருக்கிறார். லிங்காயத்துக்கள் அதிக இருக்கும் எல்லா தொகுதிகளுக்கும் அவர் சென்றுள்ளார். இதில் அவர் பேருந்து மூலம்தான் அதிகம் பயணம் செய்துள்ளார். மொத்தம் 3,500 கிமீ தூரம் அவர் பேருந்து மூலம் பயணம் செய்துள்ளார். 10 சதவிகித பகுதிகளுக்குத்தான் அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளார்.
இதன் மூலம் ராகுல் காந்தி, கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற முதல் வெளிமாநில அரசியல் தலைவர், முதல் கட்சித்தலைவர் என்ற பெயரை பெற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது. இதன் பயன் எப்படி இருக்கும் என்று தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.