8,165 கோடி மதிப்புக்கு விவசாய கடன் தள்ளுபடி: கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற சுமார் 8,165 கோடி மதிப்புள்ள விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்களும் பேசும்போது, விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைவிடுத்தனர்.
முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரும் விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் இந்த அரசு பதவியை விட்டு விலக வேண்டும் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சித்தராமையா இன்று சட்டசபையில் உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறுகையில், கர்நாடகாவில் பெரும் வறட்சி நிலவுவதை கருத்தில் கொண்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ரூ.50 ஆயிரம் வரையிலான குறுகிய கால கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்.
இதனால், 22,27506 விவசாயிகள் பயனடைவர். மொத்த கடன் தள்ளுபடி மதிப்பு ரூ.8,165 கோடியாகும் என்றார். மேலும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் வலியுறுத்த வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது. விவசாய பிரச்சினையை வைத்து பிரசாரம் செய்து வந்த பாஜக பக்கமாக பந்தை திருப்பிவிட்டுள்ளார் சித்தராமையா. இனிமேல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடனை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.