கர்நாடகாவில் பரபரப்பு- ரூ500 கோடி லஞ்சம்- முதல்வர் சித்தராமையா மீது புது வழக்கு போட ஆளுநர் அனுமதி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் கனிம சுரங்கத்தைப் புதுப்பிப்பதற்கு ரூ.500 கோடி லஞ்சம் வாங்கியதாக முதல்வர் சித்தராமையா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர ஆளுநர் அனுமதிக்க கோரி சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது ஏற்கனவே முடா நில முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியமான முடா, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கியது என்பதுதான் அந்த வழக்கு.

இந்த வழக்கில் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால் அமலாக்கத்துறையோ விடுவதாக இல்லை. சித்தராமையாவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 17-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் சித்தராமையாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது 2015-ம் ஆண்டு முதல், முதல்வராக பதவி வகித்த காலத்தில் 8 கனிம சுரங்கங்களை புதுப்பிக்க ரூ.500 கோடி லஞ்சம் பெற்றார் என்பதுதான் சித்தராமையா மீதான புதிய புகார். சித்தராமையாவின் ரூ.500 கோடி லஞ்சத்தால் கர்நாடகா மாநில அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
ஆகையால் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி தர வேண்டும் என சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீது ஆளுநர் என்ன முடிவெடுப்பார்? சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதித்து புதிய அணுகுண்டை ஆளுநர் வீசுவாரா? என்பது கர்நாடகா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications