நீதிபதி குன்ஹா அவமதிக்கப்பட்ட வழக்கு. வேலூர் மேயர் உள்பட 34 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பெங்களூரு : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உளபட 34 பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வருக்கு 2014, செப்.27-இல் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைக் கண்டித்து, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உள்ளிட்ட 34 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மபால், ஜெயகுமார் ஹிரேமத் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மோகன் சாந்தன கெüடர், பூதியால் ஆகியோர் முன் நேற்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதா மீதான தீர்ப்பில் நீதிபதி குன்ஹாவை அவமதிக்கும் வகையில், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி போராட்டம் நடத்தியுள்ளார்.
மேலும், வேலூர் மாநகராட்சியில் குன்ஹாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நீதிபதி குன்ஹாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித் துறையையே அவமதிக்கும் செயலாகும். எனவே, வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த வழக்கில் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உள்பட 34 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.