கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஆபத்து? எடியூரப்பா பக்கம் சாயும் காங். எம்எல்ஏக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்று பாஜக நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது பாஜக. இருப்பினும் 78 இடங்களை வென்ற காங்கிரஸும், 37 இடங்களை வென்ற மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா மீண்டும் ஆட்சியை பிடிக்க பக்காவாக திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.
குமாரசாமி காரணம்
இந்த நிலையில்தான், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், முதல்வர் குமாரசாமிதான் என்று குற்றம்சாட்டுகிறார்கள் காங்கிரசார். குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வலுவாக உள்ள தெற்கு கர்நாடகாவிற்கு அதிலும் குறிப்பாக, மண்டியா, ராம்நகர், ஹாசன் மாவட்டங்களுக்கு மட்டுமே அதிக திட்டங்களை அறிவித்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் வலுவாக உள்ள வட கர்நாடகாவிற்கு அதிக திட்டங்கள் அறிவிக்கவில்லை. இதனால் பாஜகவினர் காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வட கர்நாடக மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
வட கர்நாடகா
இதையடுத்து வட கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பீதியில் உள்ளனர். அடுத்த தேர்தலுக்குள்ளாக தங்கள் மீதான மக்கள் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று அஞ்சி காங்கிரஸ் மேலிடத்தில் புகார் அளித்தனர். ஆனால், மேலிடமோ லோக்சபா தேர்தல் வரை மஜதவிற்கு எதிராக வாய் திறக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் நிலைமை இன்னும் மோசமான அளவிற்கு சென்றுள்ளது.
தேவகவுடா குடும்பம்
தேவகவுடா மகனும், முதல்வர் குமாரசாமியின் அண்ணனுமான ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். ஆனால், அவர் பிற அமைச்சக பணியிட மாற்றங்களிலும் தலையிடுவதாக முனுமுனுப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அதிகமாக குமுறுகிறார்கள். ஆனால் ரேவண்ணா விஷயத்தில் தலையிட குமாரசாமி தயங்குகிறார். மஜதவினர் ஆதிக்கம்தான் ஆட்சியில் இருப்பதாகவும் குறிப்பாக குடும்ப ஆதிக்கம் இருப்பதாகவும் குறைபடும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் பாஜக பக்கம் சாயலாம் என கூறப்படுகிறது.
பெல்காம் பிரச்சினை
இதுதவிர, பெல்காமில் கோலோச்சி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி (காங்கிரஸ்) அவரது சகோதரரும் எம்எல்ஏவுமான சதீஷ் ஜார்கிஹோலி ஆகியோருக்கு எதிராக சீனியர் அமைச்சர் டி.கே.சிவகுமார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெல்காமில் மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பால்கரை வளர்த்துவிடுவதாக சிவகுமாருக்கு எதிராக ஜார்கிஹோலி சகோதரர்கள் குற்றம்சாட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியை உடைக்க முயல்வதாக செய்திகள் பரவி வருகின்றன. எனவே எடியூரப்பா இப்போது ரொம்பவே குஷியாக உள்ளார்.