எளிமை! கூட்டு திருமணத்தின்போது தனது மகளுக்கும் கல்யாணம் செய்து வைக்கப்போகும் கர்நாடக அமைச்சர்
பெங்களூரூ: 96 ஏழை ஜோடிகளுக்கு நடைபெறும் கூட்டு திருமணத்தின்போது தனது மூத்த மகளுக்கும் திருமணம் செய்து வைத்து எளிமையான திருமணங்களின் அவசியத்தை உணர்த்த உள்ளார் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா.
கர்நாடக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஆஞ்சநேயா. இவரது மூத்த மகள் அனுபமாவுக்கும், பொதுப்பணித்துறை இன்ஜினியர் சேகரப்பா என்பவரின் மூத்த மகன் சாஸ்வத் என்பவருக்கும் இம்மாதம் 19ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. கவுன்சிலர் மகளுக்கு திருமணம் நடந்தாலே ஊரை அடைத்து விழா ஏற்பாடுகள் செய்யும் காலத்தில், அமைச்சரின் மகளுக்கு எப்படி திருமணம் நடைபெற போகிறது தெரியுமா?
ஏழைகளுக்காக நடத்தப்படும் கூட்டு திருமணத்தில் ஒரு ஜோடியாகத்தான் ஆஞ்சநேயாவின் மகள் கழுத்தில் தாலி ஏறப்போகிறதாம். ஆம்.. சித்ரதுர்கா மாவட்டம் கொலழகெரே நகரிலுள்ள கல்லூரி மைதானத்தில் வைத்து அன்றைய தேதியில் 96 ஏழை ஜோடிகளுக்கு நடைபெற உள்ள கூட்டு திருமணத்தின்போதுதான் அதோடு ஒரு ஜோடியாக சேர்ந்து அனுபமா திருமணமும் நடைபெற உள்ளது.
அமைச்சர் மகள், அதுவும் மூத்த மகள் திருமணத்தை ஊரே மெய்ச்சும்படி நடத்தக்கூடாதா என்று ஆஞ்சநேயாவிடம் யாராவது உறவினர்கள் கேட்டதற்கு, நான் அப்படி செய்தால் எளிமையான திருமணம் குறித்து மக்களிடம் நான் செய்து வரும் விழிப்புணர்வு பிரச்சாரம் பொய் என்று ஆகிவிடும். எனவே நானே முன்மாதிரியாக மாற உள்ளேன். திருமண செலவுகளால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைவதை தவிர்க்க வேண்டியது நாகரீக சமூகத்தின் பணியாகும் என்று கூறுகிறாராம் அமைச்சர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தனது மகனுக்கு, காதும் காதும் வைத்ததுபோல எளிமையாக கல்யாணத்தை நடத்தி வைத்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.