கர்நாடகா வளர்ச்சியை மற்ற மாநிலங்களுக்கு செயல்படுத்துங்க.. பிரதமரின் பேச்சுக்கு காங். அமைச்சர் பதிலடி
கர்நாடகா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு : வாங்க பிரதமர் மோடி, கர்நாடகாவின் வளர்ச்சியை பார்த்து மற்ற மாநிலத்திற்கும் செயல்படுத்துங்கள் என்று கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே டுவிட்டரில் மோடியின் பேரணி பேச்சுக்கு பதில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியால் கர்நாடகா பல துறைகளிலும் முன்னோடியாக இருப்பதாகவும் கார்கே தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ள நிலையில் ஆளும் கட்சியான காங்கிரஸ்க்கும், காங்கிரஸ் கட்சியை வீழ்த்த நினைக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே நேற்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமரின் வருகை குறித்து சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர அரசியல் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கர்நாடகா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வருகை குறித்து கருத்து பகிர்ந்திருந்தார்.
அதில் "நம்ம கர்நாடகாவிற்கு வருகை தந்திருக்கு திரு. மோடி அவர்களே வருக, கர்நாடகாவில் எந்த அளவிற்கு வளர்ச்சி மாநிலமாக்கி இருக்கிறோம் என்பதை நீங்கள் இந்த பயணத்தில் புரிந்து கொள்விர்கள். இந்த வளர்ச்சியையே நாட்டின் பிற மாநிலங்களுக்கு செயல்படுத்த கர்நாடகா உங்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும். நாங்கள் பல துறைகளில் முன்னோடியாக இருக்கிறோம்.
குல்பர்கா மாவட்டத்தை சேர்ந்த இளம் காங்கிரஸ் தலைவரான பிரியங்க் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி குறித்து விமர்சித்த பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்க் கார்கே மேலும் குறிப்பிட்டுள்ள கருத்தில் "நாட்டின் 44 சதவீத முதலீட்டு திட்டங்களில் கர்நாடகாவின் பங்கு மிக அதிகம். இதை நாங்கள் சொல்லவில்லை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி விமர்சித்த ஸ்டார்ட் அப் துறை பிரியங்க் கார்கே வசம் தான் உள்ளது. இது குறித்து குறிப்பிட்டுள்ள கார்கே "கர்நாடகா தான் ஸ்டார்ட் அப்களுக்கு நிதி கொடுப்பதில் முதல் இடம் வகிக்கிறது. ஸ்டார்ட் அப் இந்தியா கூட எங்களுடன் இணைந்து கொள்ளலாம், வளர்ச்சிக்கு முன்மாதிரியாக குஜராத்தை பின்பற்ற வேண்டாம். நாங்கள் நாடு முன்னேற ஆக்கப்பூர்வமான உதவிகளையும், புதுப்புது கண்டுபிடிப்புகளையும் செய்து வருகிறோம்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மக்களுக்கு சில வாக்குறுதிகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவிலை. பிறகெதற்கு புதிய ஏமாற்றும் உறுதிமொழிகள் பிரதமரே என்று காங்கிரஸ் போட்டுள்ள டுவீட்டையும் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார். வெற்று வாக்குறுதிகளை அளிப்பது அடுத்த பொதுத் தேர்தல் வரையும் கூட தொடரும் என்றும் கார்கே இதற்கு பதில் அளித்துள்ளார்.
பாஜக தேர்தல் பேரணிகளை தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களை தொடங்க உள்ளது. கர்நாடகாவின் கொப்பல், ராய்ச்சூர்,குல்பர்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிப்ரவரி 10 முதல் பிரச்சாரம் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.