தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் சீனியர்கள் போர்க்கொடி
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று முதல் வருகிற 27ம் தேதிவரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டமும், மாலையில் அனைத்து கட்சி கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி இன்று மதியம் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்துக்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக சட்ட ஆலோசகர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட சீனியர் அமைச்சர்களான சிவகுமார், எம்.பி.பாட்டில், ரமேஷ்குமார் உள்ளிட்ட பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் கோபத்தில் இருந்து தப்ப உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவது சரி என்பது அவர்கள் வாதமாம். அமைச்சர்கள் கருத்துக்களை இன்று மாலை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் சித்தராமையா எடுத்துரைத்து அவர்கள் கருத்தையும் கேட்க உள்ளார்.