10 நாளில் ரூ.48 லட்சத்துக்கு டின்னர் சாப்பிட்ட கர்நாடக அமைச்சர்கள்! கடுப்பில் மக்கள்
பெங்களூர்: கர்நாடக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் 10 நாள் சாப்பாடு செலவு ரூ.48 லட்சத்தை தாண்டியுள்ள அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டம், தலைநகர் பெங்களூரை தவிர்த்து, பெல்காமிலுள்ள சுவர்ணசவுதா கட்டிடத்தில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 10 நாள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதில் அமைச்சர்கள் மற்றும் சில மூத்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே ஹோட்டலில் 53 அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த அமைச்சர்களும், அதிகாரிகளும், 10 நாட்களில் இரவு உணவு மட்டும் 48 லட்சம் ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளதாக ஆர்.டி.ஐ போராட்டக்காரர் பீமப்பா கடக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். சரியாக சொல்ல வேண்டுமானால், 48 லட்சத்து 1244 ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர்.
காலை மற்றும் மதியம் சட்டசபை கேண்டீனில் சாப்பாடு தரப்பட்ட நிலையில், இரவு மட்டும் ஹோட்டல்களில் சாப்பிட அனுமதி தரப்பட்டிருந்தது. ஒருநாள் சாப்பாட்டுக்கு 350 ரூபாய் படி கொடுக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இஷ்டத்துக்கு, எதை, எதையோ சாப்பிட்டு பில்லை ஏற்றிவிட்டுள்ளனர் இந்த அமைச்சர்களும், அதிகாரிகளும்.
இதில் அதிகமாக சாப்பிட்டது பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவ பிரசாத். அவரது பத்து நாள் பில் தொகை ரூ.1,98,936. இதற்கடுத்ததாக, சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா ரூ.1,84,856 லட்சத்துக்கு சாப்பிட்டுள்ளார். இப்படி அமைச்சர்கள் பலரும் லட்சங்களில் சாப்பிட்டுக் கொண்டிருக்க உணவு வழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சாப்பாட்டு செலவு வெறும் 908 ரூபாய் மட்டுமே என்பது இதில் ஆறுதல் செய்தி.
சாப்பாட்டு பில் பிரச்சினை தற்போது கர்நாடக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு வயிற்று சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் வாழும் நாட்டில், லட்சக்கணக்கில் செலவிட்டு மக்கள் பணத்தில், மக்களின் பிரதிநிதிகள் சாப்பிடுவதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.