மடாதிபதி மீது பாலியல் புகார்.. விடுதி வார்டனிடம் போலீஸ் தீவிர விசாரணை.. கர்நாடகாவில் பரபரப்பு!
சித்ரதுர்கா: கர்நாடகாவில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மடத்தின் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்த ராஷ்மியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகமடம் செயல்பட்டு வருகிறது. இந்த முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார். இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகள் இருவரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர்.
விடாத கர்நாடகா.. விநாயகர் சதுர்த்தி பந்தல்களில் சாவர்க்கர் படம்.. பெங்களூரில் கிளம்பும் சர்ச்சை
மாணவிகள் புகார்
இதையடுத்து அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு குழந்தைகள் குறித்து கூறியுள்ளனர். இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோ வழக்கு
தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவருக்கு உடந்தையாக இருந்த வார்டன் ராஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவிகள் சித்ரதுர்கா முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விடுதி வார்டனிடம் விசாரணை
இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட யாரும் கைது செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் முருக மடத்தில் செயல்பட்டு வரும் விடுதியின் வார்டன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவரிடம் மாணவிகள் பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் மடாதிபதியிடம் விசாரணை?
அதுமட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு-விடம் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வார்டனிடம் விசாரணை முடிவடைந்த பின், காவல்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை விசாரணை
மேலும் சித்ரதுர்கா துணை ஆணையரின் காரை தடுத்து நிறுத்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.