காவிரி: கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம்- ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறது கர்நாடகா. ஆனால் இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ரயில் மறியல் போராட்டம்
கடந்த 2 வார காலமாக கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை பெருமளவில் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கன்னட இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.
1 லட்சம் பேர்
இன்றைய மறியல் போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கபர் எனவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் கர்நாடகாவில் இன்று காலை முதல் ரயில்கள் முழு அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
போலீசார் குவிப்பு
இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 9480802140 என்ற எண்ணில் ரயில் சேவை குறித்த தகவல்களை அறியலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
போராட்டம் தொடரும்
முன்னதாக நேற்று மைசூரு வங்கி சர்க்கிளில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியிருந்தார்.