சுப்ரீம் கோர்ட்டுக்குப் பயந்து... கர்நாடக சட்டசபை 'ஜாக்கிரதை' தீர்மானம்.. நைசாக பெங்களூர் சேர்ப்பு
பெங்களூர்: காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜெகதீஷ் ஷெட்டர் ஆங்கிலத்திலும், ம.ஜ.த உறுப்பினர் தத்தா, கன்னடத்திலும், ஒரே தீர்மானத்தை இருமுறை தாக்கல் செய்தனர்.
அந்த தீர்மானத்தில் சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை தவிர்க்க நாசுக்கான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதிக்குள் பெங்களூரையும் நுழைத்துள்ளனர்.
அந்த தீர்மானத்தில், கர்நாடகாவில் மழை பொய்த்துவிட்டதாகவும், கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு அணைகளில் மொத்தமே, 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும், பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே 4 அணைகளிலிருந்தும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
சுப்ரீம் கோர்ட்டுக்குப் பயந்து... கர்நாடக சட்டசபை 'ஜாக்கிரதை' தீர்மானம்.. நைசாக பெங்களூர் சேர்ப்பு pic.twitter.com/ocwNADKZqO
— Oneindia Tamil (@thatsTamil) September 23, 2016
இந்த தீர்மானத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எதுவும் விமர்சனம் செய்யப்படவில்லை. குடிநீர் தேவை என்பதே முக்கியத்துவமாக கூறப்பட்டுள்ளது. சட்டசபை, அரசை வலியுறுத்துவது போல தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் பெயரும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
காவிரி பாசன பகுதியில் பெங்களூர் வரவில்லை. நடுவர்மன்றம் தனது இறுதி தீர்ப்பிலும் பெங்களூரை காவிரி பாசன பகுதி என கூற மறுத்துவிட்டது. ஆனால் பெருகிவரும் மக்கள் தொகையால், பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரியை நம்பியுள்ளது கர்நாடகா. எனவே பேரவை தீர்மானத்தில், பெங்களூரையும் உள்ளடக்கி என்ற வார்த்தையை குறிப்பிட்டு சேர்த்துள்ளனர்.
இது நன்கு யோசித்து உருவாக்கப்பட்ட தீர்மானம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.