சிபிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவுகிறார் கார்த்தி சிதம்பரம்?
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கார்த்தி சிதம்பரம் நழுவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். டெல்லி சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 5 நாள் காவல் விதித்துள்ள நிலையில், மும்பையில் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளராக இருந்த இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு நேற்று கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அழைத்து சென்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்திராணி முகர்ஜியிடம் லஞ்சம் வாங்கவில்லை என்று அப்போது கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார். மேலும், சிபிஐ விசாரணையின்போது கேள்விகளுக்கு உரிய பதிலை வழங்காமல் தப்புவதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படும் என்பது கார்த்தி சிதம்பரத்திற்கு தெரிந்திருப்பதாகவும், எனவே அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தப்புகிறார் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காவல் காலம் நிறைவடைந்ததால், நாளை கார்த்தி சிதம்பரத்தை மீண்டும் நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications