பணப் பற்றாக்குறை எதிரொலி…. கோழிக்கோடு கனரா வங்கிக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோழிக்கோடு கனரா வங்கியில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் வங்கிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம், வங்கியின் துணை மேலாளர் மனு அளித்துள்ளார்.
கோழிக்கோடு: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கனரா வங்கியில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் வங்கியை தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் அதன் துணை மேலாளர் அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நவம்பர்.8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பினால் நாடுமுழுவதும மக்கள் வங்கிக் கிளைகளில் காத்துக் கிடக்கும் அவலம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் மக்கள் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தும் அவலங்களும் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் கோழிக்கோடு கனரா வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கவும், காசோலைகளுக்கு பணம் வழங்கவும் போதிய பணம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பணம் விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அந்த வங்கி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் வங்கி அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. அதனைத்தொடரந்து வங்கிக்கும் அதன் ஊழியர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரிடம் அந்த வங்கியின் துணை மேலாளர் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணப்பற்றாக்குறையினால் வங்கிக்கு பாதுகாப்பு கேட்டு அதிகாரிகள் மனு அளித்திருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications