''வெள்ளத்துக்கு காரணம் தமிழகம்'': பழியை திருப்பிய பினராயி விஜயன்! கேரளாவின் நோக்கம் என்ன?
Recommended Video
திருவனந்தபுரம்: வெள்ள சேதத்திற்காக, கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசு மீது எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ள சேத பாதிப்புக்கான காரணத்தை தமிழகத்தை நோக்கி திருப்பி விட்டுள்ளார் அம்மாநில முதல்வர்.
முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி தண்ணீர் இருக்கும் போது படிப்படியாக தண்ணீரை திறந்துவிட்டு இருந்தால், இடுக்கி அணையில் இருந்து மெல்ல மெல்ல நாங்களும் தண்ணீரை திறந்திருக்க முடியும். ஆனால், தமிழகம் 142 அடி வரை காத்திருந்து அதன் பிறகு தண்ணீர் திறந்துவிட்டதால், மொத்தமாக இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டியதாயிற்று. இதன் காரணமாக கேரளாவில் பெரும் அழிவு ஏற்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு நேற்று தெரிவித்தது.
இது முற்றிலும் தவறான வாதம் என்கிறார்கள் நீர் வல்லுநர்கள். ஏனெனில் முல்லை பெரியாறு அணை 138 அடியாகும் முன்பே கேரளாவில் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டு விட்டது. ஆகஸ்ட் 13-ம் தேதி எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடிவிட்டது.
இதற்குக் காரணம் இடுக்கியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தான். எனவே ஒருவகையில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததுதான், அழிவை மேலும் அதிகரிக்காமல் இருக்க செய்தது. ஆனால் எப்படியாவது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக தண்ணீரை பெற்று விட வேண்டும் என்ற நோக்கம் தான் கேரளாவின் இந்த வாதத்திற்கு காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இது மட்டுமின்றி கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா சமீபத்தில் அளித்த பேட்டியில், கேரளாவில் உள்ள அணைகளை மொத்தமாக திறந்து விட்டது தான் அழிவுக்கு காரணம்.. படிப்படியாக அணைகளை திறந்து விட்டிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இப்போது அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்காக தமிழகத்தை நோக்கி கை காட்டி உள்ளார் பினராய் விஜயன் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது இதுதான் போலும். தமிழகத்தைப் பொறுத்த அளவில் முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி தண்ணீரைத் தேக்கி வைக்க 32 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது. அதனால் வெள்ளத்தை காரணம் காட்டி அதை 139 அடியாக குறைத்து கொள்ள கண்காணிப்பு குழு வாயிலாக அனுமதி பெற்றுக் கொண்டது கேரளா. மற்றொரு பக்கம் வெள்ளத்திற்கான பழியையும், தமிழகம் மீதே போட்டுள்ளது கேரளா. இதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீரும் இல்லை, வீண் பழியும் சுமந்தாகிவிட்டது.
வெளிப்படையாக தெரிந்த, இந்த விஷயத்தில் தமிழக அரசு சிறப்பான வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.