கேரளாவை சேர்ந்த 13 பேர் திடீர் மாயம்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து விட்டதாக பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் காசர்கோட் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரபு நாட்டுக்கு மத கல்வி பயில சென்ற பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 13 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களது குடும்பத்தார் இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனிடம் முறையிட்டுள்ளனர்.
காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலாம், ஹசீசுதீன் உட்பட 9 ஆண்கள், 4 பெண்கள், ஒரு குழந்தை, ஒரு கைக்குழந்தை என 13 பேர் கடந்த மாதம் மத கல்வி நோக்கத்திற்காக அரபு நாடு செல்வதாக கூறி கிளம்பியுள்ளனர்.
ரம்ஜானுக்கு அவர்கள் கேரளா திரும்ப வேண்டியிருந்த நிலையில், காணாமல் போனவர்களிடம் இருந்து, உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம், தாங்கள் ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.
"எங்கள் இறுதி இலக்கை அடைந்துவிட்டோம்" என ஒருவர் தனது உறவினருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். 13 பேரும் துபாய் மூலமாகவோ அல்லது இலங்கை சென்றோ தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
"இங்கு இறைவன் ஆட்சி நடக்கிறது, நீங்களும் இங்கு இணைந்துவிடுங்கள்'' என்று மாயமாகியுள்ள இளைஞர் ஒருவரின் செல்போன் எண்ணில் இருந்து அவரின் கேரள உறவுக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது.
மாயமானவர்கள் தீவிரவாதிகளாகிவிட்டார்களா, அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்த தகவல்களை விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, கேரளாவில் பலர் தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.