கேரளா வெள்ளத்திற்கு எல்லா அணையையும் திறந்ததுதான் காரணமா? உருவான சர்ச்சை.. பினராயி விளக்கம்!
கேரளா வெள்ளத்திற்கு அணைகளை முன்னறிவிப்பின்றி திறந்ததுதான் காரணம் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு அணைகளை முன்னறிவிப்பின்றி திறந்ததுதான் காரணம் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பெருமளவு வெள்ளம் இப்போதுதான் வடிய தொடங்கியுள்ளது.
ஆனால், அங்கு இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். இந்த நிலையில் இந்த வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசுதான் காரணம்
இந்த குற்றச்சாட்டை முதலில் வைத்தது, கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான, ரமேஷ் சென்னிதலாதான், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் என்பது மனிதர்கள் உருவாக்கிய வெள்ளம், இது இயற்கை உருவாக்கியது கிடையாது என்று குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து பாஜக கட்சியும் ஆளும் கம்யூனிஸ்ட் தரப்பு மீது குற்றச்சாட்டு வைத்தது.
அணை திறப்பு
இதற்கு முக்கியமாக அவர்கள் மூன்று காரணங்களை சொன்னார்கள். அணையை முன்னறிவிப்பு இன்றி திறந்தது, அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறந்தது, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறக்காமல் மதகுகளை மொத்தமாக திறந்துவிட்டது என்று மூன்று காரணங்களை தெரிவிக்கிறார்கள். 44 அணைகளை ஒரே நேரத்தில் திறந்ததாக அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
விளக்கம் என்ன
இதற்கு, தற்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அணையை முன்னறிவிப்பு இன்றி திறக்கவில்லை , கடந்த ஒரு மாதமாக ப்ளூ அலெர்ட் , ஆரஞ்ச் அலெர்ட், ரெட் அலெர்ட் கொடுத்துவிட்டுதான் அணையை திறந்தோம். எல்லா அணையையும் ஒரே நேரத்தில் திறக்கவில்லை, 4 நாட்கள் இடைவெளி விட்டோம், கடைசியில்தான் இடுக்கி அணையை திறந்தோம் என்றுள்ளார். மேலும், மதகுகளை எவ்வளவு மெதுவாக வெளியேற்ற முடியுமோ அவ்வளவு மெதுவாக திறந்தே நீர் வெளியேற்றினோம் என்றுள்ளார்.
பெரிய மழை
மேலும் இந்த வெள்ளத்திற்கு அணையை திறந்தது காரணம் இல்லை. சென்ற ஆண்டை விட 44 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளது. இதுமட்டும்தான் வெள்ளம் ஏற்பட காரணம் என்றுள்ளார். இதுகுறித்த விரிவான அறிக்கையை அரசு விரைவில் தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.