கேரளத்தின் முதல் தலித் அர்ச்சகர்.. மணப்புரம் சிவன் கோவிலில் பணியைத் தொடங்கினார்!
கேரளத்தின் முதல் தலித் அர்ச்சகர், மணப்புர்ம சிவன் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார்.
மணப்புரம்: கேரளத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையின்படி, முதல் தலித் அர்ச்சகர் சிவன் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார்.
கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில், பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரள தேவசம் தேர்வு வாரியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது.
இதை கேரள அரசும் சமீபத்தில் ஏற்றுக் கொண்டது. இதற்கு மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர். தேவஸ்வம் போர்டு பரிந்துரைத்த 36 பேரில், 6 பேர் தலித் சமூகத்தினர் ஆவர். அவர்களில் ஏடு கிருஷ்ணன் (22) என்பவர் திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அக்கோயிலில் அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தற்போது அக்கோயிலில் தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் கிருஷ்ணனும் கோயிலுக்குள் சென்றார். அங்கு மந்திரம் ஓதி தனது பணியை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், கேரளாவின் முதல் தலித் அர்ச்சகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிருஷ்ணன். இவரது சொந்த ஊர் திருச்சூர் மாவட்டமாகும். அங்குள்ள கோயிலில் சிறு வயது முதலே பூஜை செய்து வந்தார். சம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.