உம்மன்சாண்டி ராஜினாமா கோரி திருவனந்தபுரத்தில் தொடர் போராட்டம் - கண்ணீர்புகை குண்டு வீச்சால் பதற்றம்
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இடதுசாரியினர் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர் இதனால் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பதற்றம் நிலவி வருகின்றது. திருவனந்தபுரத்தில் இன்று நடந்த போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
கேரளா அரசியலில் பெரும் சூறாவளியாக சோலார் பேனல் மோசடி வழக்கு விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் சரிதா நாயர், அடுத்தடுத்து முதல்வர் உம்மன்சாண்டி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் பதிவு செய்ய திருச்சூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உம்மன்சாண்டி அரசு ராஜினாமா செய்யக் கோரி இடதுசாரிகள் போராட்டங்களில் குதித்தனர். இந்நிலையில் உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் பதிவு செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி இன்றும் 2-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் நோக்கி 10,000 இடதுசாரி தொண்டர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்ததால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கூடத்தை கலைக்க முயற்சித்தனர்.
இருதரப்பினர் இடையே மோதல் உருவானதால் திருவனந்தபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நாளையும் இப்போராட்டம் தொடரும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் தலைநகர் திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.