கேரளாவின் ஒரே பெண் அமைச்சர் ஜெயலட்சுமி திருமணம்..!
வயநாடு: கேரள அரசில் பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி தமது உறவு முறையை சேர்ந்த சி.ஏ.அனில் குமார் என்ற விவசாயியை நேற்று மணந்தார்.
நேற்று வாலாடு அருகே அமைச்சரின் சொந்த ஊரான மாம்பயிலில் திருமணம் நடைபெற்றது. காலையில் பழங்குடியினரின் "குரிச்சியா" சடங்கு முடிந்ததும் பச்சை வண்ண பட்டுப் புடவை உடுத்தி வந்த ஜெயலட்சுமி, முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
வெள்ளை வேட்டி, பட்டு சட்டையுடன் வந்த அனில் குமார் ஜெயலட்சுமி யின் கழுத்தில் தாலி கட்டினார். இதையடுத்து, இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
தம்பதியை திருமணத்திற்கு வந்திருந்த உற்றார், உறவினர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அட்சதை துாவி ஆசிர்வாதம் செய்தனர். கேரளாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஆளுங்கட்சி அமைச்சரின் திருமணம் என்பதால், பல டிவி சேனல்கள் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பின.
மனந்தவாடி ரிசர்வ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக ஜெயலட்சுமி உள்ளார். கேரள அமைச்சராக உம்மன் சாண்டி இருந்தபோது 1977ல் மாரியம்மாவை மணந்தார். அதுபோல், பல ஆண்டுகளுக்கு முன்னால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.ஆர்.கவுரிக்கும், அமைச்சர் டி.வி.தாமசுக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெயலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு அவர் எம்.எல்.ஏவாக உள்ள மானந்தவாடி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் திருமணப் பரிசாக அறிவித்துள்ளனர்.