ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடைக்கானலுக்கு குறி.. குற்றப்பத்திரிகை சொல்வது என்ன? முழு விவரம்
திருவனந்தபுரம்: கொச்சி பிரிவு என்.ஐ.ஏ எர்ணாக்குளம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகையில் உள்ள அம்சங்கள் உலுக்கும் வகையில் உள்ளன. மொய்னுதீன் என்பவர் குறித்த தகவல்களுக்காக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி suo-motu வழக்காக தானாக முன்வந்து என்.ஐ.ஏ இந்த வழக்கை பதிவு செய்தது. கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் மற்றும் சில பெயர் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அன்சீத் முகமது என்பவர் ஏ-1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரும், ஸ்வாலி முகமது, ரஷித் அலி, சப்வான், ஜசிம் ஆகிய 4பேரும் கன்னூர் பகுதியில் வைத்து அக்டோபர் 2ம்தேதி, கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் என்றும் அந்த தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், அன்றைய தினம் மாலையில், ஏ-4 குற்றவாளியான ராம்ஷத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சோஷியல் மீடியாக்கள் வாயிலாகவும் தீவிரவாத சதிச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டனர் என்பது அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் உபகரணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஏ-1 குற்றவாளி முதல் ஏ-4 குற்றவாளி வரையிலும், அதேபோல ஏ-9 மற்றும் ஏ-10 குற்றவாளிகளுக்கு எதிராகவும், தலைமறைவாக உள்ள சஜீர் மங்களச்சேரி ஆகியோருக்கு எதிராக இவ்வாண்டு மார்ச் 29ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், டேப்லெட் உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்தியபோது, கேரளாவிலுள்ள முன்னணி அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமானது. இந்த தீவிரவாத கும்பல் சுற்றுலா பயணிகளையும் குறி வைத்தது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக கொடைக்கானல் அருகேயுள்ள வட்டகனல் பகுதிக்கு வரும் யூதர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சஜீர் மங்களச்சேரிதான் மொய்னுதீனை தூண்டுவித்து தீவிரவாத செயல்களில் ஈடுபட வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் மாதத்தில் மொய்னுதீன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்தபோது, கேரளாவிலும், தமிழகத்திலும் தீவிரவாத செயல்பாடுகளுக்காக நிதி அனுப்பியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொய்னுதீன் எமிரேட்சிலிருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது பிடிபட்டதாக கூறப்பட்டுள்ளது.