கொல்கத்தா மருத்துவர் கொலை.. 14 இடங்களில் கொடூர காயங்கள்.. சாவிலும் போராடிய அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொலையாளிக்கும், அப்பெண்ணுக்கும் இறப்புக்கு முன்பு கடும் போராட்டம் நடந்திருப்பது காயங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெண்ணில் உடலில் 150 மில்லி கிராம் விந்தணு இருந்துள்ளது. பெண்ணின் உடலில் இருக்கும் காயங்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின்போது கொலையாளிக்கும், பெண் மருத்துவருக்கும் கடும் போராட்டம் நடந்துள்ளது. இதன் மூலம் அப்பெண்ணுக்கு பல இடங்களில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பெண்ணின் மூக்கு, வலது தாடை, இடது கை, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் பெண் கொல்லப்படுவதற்கு முன்பு கடுமையாகப் போராடி தப்பிக்க முயன்றுள்ளார் என்பதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நுரையீரலில் உறைந்த ரத்தம் இருப்பதும் கொலையாளி அப்பெண்ணை கடுமையாக துன்புறுத்தியுள்ளார் என்பதை காட்டுவதாகவும் உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications