லோக்சபா தேர்தல் களத்தில் மனைவி, மகள்... லாலு திட்டம்
பாட்னா: வரும் லோக்சபா தேர்தலில் தனது மகள் மிசாவை எம்.பி வேட்பாளராக நிறுத்த லாலு பிரசாத் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அளவில் லாலு பிரசாத் யாதவின் செலவாக்கு சற்று ஓய்ந்திருக்கலாம். ஆனால் அவர் வீழ்ந்து விடவில்லை. மாட்டுத் தீவண வழக்கில் சிக்கி தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார். மேலும் அவரால் போட்டியிடவும் முடியாது.
இந்நிலையில் வரும் லோக்சபாத் தேர்தலில் தனது மகள் மிசாவைக் களமிறக்க லாலு முடிவு செய்துள்ளாராம்.
உடைந்தது கட்சி...
லாலுவின் கட்சி உடைந்து அக்கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக திரும்பியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அதில் 9 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவே லாலு விளக்கியுள்ளார்.
பெண்கள் சக்தி...
இந்த நிலையில் தனது இழந்த செல்வாக்கு மீட்க தனது மகள் மிசாவைக் களத்தி்ல இறக்க லாலு திட்டமிட்டு்ளதாக தெரிகிறது. அதாவது தனது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி ஆகியோரை களத்தில் இறக்கி பீகார் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பெண்கள் சக்தியை வைத்து தனது கட்சியை தேற வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.
ராப்ரிக்கு சப்ரா தொகுதி....
அதன்படி, ராப்ரியை சப்ரா தொகுதியிலும், மகள் மிசாவை பாட்லிபுத்ரா தொகுதியிலும் அவர் நிறுத்துவார் எனத் தெரிகிறது.
2015 தேர்தல் மகன்களுக்கு...
மேலும், லாலுவின் மகன்கள் தேஜ்ஸவி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்களாம். மாறாக சகோதரிக்கு்ம், தாயாருக்கும் உதவியாக இருப்பார்களாம். ஆனால், இரு மகன்களும் 2015ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார்களாம்.
லாலுவின் கோட்டை....
உ.பி. பீகார் எல்லையில் சப்ரா தொகுதி உள்ளது. இது லாலுவின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு ராப்ரி எளிதில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்லிபுத்ராவில் லாலு புத்ரி....
பாட்லிபுத்ரா, பாட்னா மாவட்டத்துக்குள் வருகிறது. இங்கு ஐக்கிய ஜனதாதளம் சற்று செல்வாக்குடன் இருந்தது. ஆனால் அது தற்போது சரிந்து விட்டதால்தான் மகளை இங்கு நிறுத்தப் போகிறாராம் லாலு.
‘மிசா'வில் பிறந்த மிசா...
38 வயதான மிசா, எம்.பி.பி.எஸ்படித்தவர் ஆவார். மிசா காலத்தில் பிறந்ததால்தான் அவருக்கு மிசா என்று பெயர் வைத்தார் லாலு எனச் சொல்வதுண்டு. லாலுவுடன் தற்போது துணையாக இருந்து வருகிறார் மிசா. வெளிப்படையாக அவர் தற்போது தேர்தல் களத்தில் இறங்கவுள்ளார்.
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்....
லாலுவுக்கும் மிசாவுக்கும் நெருக்கமானவர்கள் ‘உண்மையில் மிசாவுக்கு கட்சித் தலைவர் பதவி மீதுதான் குறி' என்கிறார்கள். கடந்த ஆண்டு லாலு தண்டனை பெற்றபோதே கட்சித் தலைவர் பதவிக்கு மிசா குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அப்போ நோ... இப்ப ஓகே
ஆனால் லாலு அப்போது தனது மகன் தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மிசாவை எம்.பி.யாக்க அவர் தீர்மானித்துள்ளாராம்.