சர்ச்சை நீதிபதி சி.எஸ்.கர்ணன் இடமாற்ற உத்தரவு- பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியது சட்ட அமைச்சகம்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது தொடர்பான உத்தரவை, மத்திய சட்டத்துறை, பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அங்கிருந்து அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருக்கும் சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா ஹைகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இது தொடர்பாக 15 ஆம் தேதி தாமாக வழக்கு பதிவு செய்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், தன்னை பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏப்ரல் 29 ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை தனது பணியில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்ததை அன்றைய தினம் மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.கெஹர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அப்போது அந்த அமர்வு, நீதிபதி சி.எஸ்.கர்ணன் பணியிட மாற்றம் தொடர்பாக 12 ஆம் தேதி தலைமை நீதிபதி உத்தரவிட்ட பிறகு, நிர்வாக ரீதியாக அல்லது நீதித்துறை ரீதியாக நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஏதாவது உத்தரவுகள் பிறப்பித்து இருந்தால் அந்த உத்தரவுகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்ததது.
இந்த நிலையில், நீதிபதி கர்ணனை கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை பிரதமர் அலுவலகத்துக்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைத்து இருக்கிறது. வழக்கமான நடைமுறைகளின்படி நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்.
அதன்பிறகு இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக பிரதமர் அலுவலகம் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். அதன்படி நீதிபதி சி.எஸ்.கர்ணனின் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவை பிரதமர் அலுவலகத்துக்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைத்து இருக்கிறது.