"இந்தியா" கூட்டணியை உடைக்கும் நிதிஷ்குமார்? டிச. 29-ல் ஜேடியூ தேசிய கவுன்சில் கூட்டத்தில் அதிரடி?
பாட்னா: "இந்தியா" கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை டிசம்பர் 29-ல் கூட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நிதிஷ்குமாரை ரொம்பவே பாடாய் படுத்திவிட்டதாம். அதுவும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்தத்தை அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லையாம்.

சமாதானப்படுத்திய ராகுல் காந்தி: நிதிஷ்குமாரின் இந்த கடும் கோபத்தையும் அதிருப்தியையும் புரிந்து கொண்டுதான் ராகுல் காந்தி, உடனே அவருக்கு போன் செய்து சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் நிதிஷ்குமாரின் ஆத்திரமும் ஆவேசமும் இன்னமும் அடங்கவில்லை. இதனையடுத்து அடுத்து என்ன செய்யலாம்? என்பது குறித்து விவாதிக்க வரும் 29-ந் தேதி ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார் நிதிஷ்குமார். இதற்கு முன்னர் எல்லாம் ஜேடியூவின் தேசிய செயற்குழு கூடிதான் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது.
யாருங்க இந்த மல்லிகார்ஜூன கார்கே?: ஜேடியூவின் அதிருப்தி, நிதிஷ்குமாரின் கோபம் குறித்து ஜேடியூ மூத்த தலைவர் கோபால் மண்டல் கூறியதாவது: மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள். மல்லிகார்ஜூன கார்கே என்றால் யார் என்றே மக்களுக்கு தெரியாது. எனக்கே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர்தான் அவரைத் தெரியும். சாமானிய மக்கள் யாருக்குமே மல்லிகார்ஜூன கார்கேவை தெரியாது. ஆனால் நிதிஷ்குமார் என்றால் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாட்டு மக்கள் நன்கு அறிந்த நிதிஷ்குமார் பிரதமராகலாம்.
நிதிஷ்தான் பிரதமர் வேட்பாளர்: இந்தியா கூட்டணி என்ற அமைப்புக்கு விதை போட்டவர் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணியின் அறிவிக்கப்படாத ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு அத்தனை மாநில கட்சிகளையும் ஒன்று சேர்த்தவர் நிதிஷ்குமார். ஆகையால் அத்தனை மாநில கட்சிகளுமே பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கோபால் மண்டல் கூறினார்.
ஜேடியூ தேசிய கவுன்சில் கூட்டம்: இந்த பின்னணியில் டிசம்பர் 29-ல் ஜேடியூ கூட்டும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் நீடிப்பதா? இல்லை நிபந்தனைகளை விதிப்பதா? அல்லது மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பி ஓடுவதா? என்பது குறித்து விவாதித்து அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆக ஒரு பிரளயத்துக்கு காத்திருக்கிறது "இந்தியா" கூட்டணி!












Click it and Unblock the Notifications