ஆட்சியை தீர்மானிக்கப் போகும் இடைத்தேர்தல் முடிவுகள்... மீண்டும் பரபரக்கும் ம.பி. அரசியல் களம்
போபால்: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் அம்மாநில அரசியல் களம் மீண்டும் பரபரப்பில் இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
மொத்தமாக காங்கிரஸ் கட்சியின் 26 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து காலியான 2 இடங்களுக்கும் சேர்த்து 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் உள்ள இடங்கள் 230. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். அக்டோபர் 25-ந் தேதி மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் தற்போதைய நிலையில் ம.பி. சட்டசபை மொத்த எண்ணிக்கை 229. பெரும்பான்மைக்கு தேவை 115 இடங்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : மெலானியா டிரம்ப் இன்று போட்ட ட்வீட் என்ன தெரியுமா?
2018-ல் கட்சிகள் பலம்
2018 சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களில் வென்றிருந்தன. 2019 அக்டோபரில் இடைத்தேர்தலி வெற்றி பெற்றதால் காங்கிரஸின் பலம் 115 ஆக அதிகரித்தது. 2019 லோக்சபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஜி.எஸ். தோமர் போட்டியிட்டு வென்றதால் பாஜகவின் பலம் 108 ஆக குறைந்தது.
சட்டசபையில் தற்போதைய பலம்
2019 காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மா காலமானதால் காங்கிரஸ் பலம் மீண்டும் 114 ஆக குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் பாஜக எம்.எல்.ஏ. அகர் மனோகர் காலமானதால் பாஜகவின் பலம் 107 ஆக குறைந்தது. கடந்த மார்ச் மாதம் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய அந்த கட்சியின் பலம் சட்டசபையில் 92 ஆனது. அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமாவில் சட்டசபையில் அக்கட்சியின் பலம் 87 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் ம.பி. சட்டசபையில் காங்கிரஸுக்கு 87; பாஜகவுக்கு 107; பகுஜன் சமாஜ்-2 சமாஜ்வாதி-1; சுயேட்சைகள் 4 பேர் உள்ளனர்.
இடைத்தேர்தல் முடிவுகள்
இடைத்தேர்தல் நடைபெறும் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாஜகவின் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது பாஜக வெல்ல வேண்டும். இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேட்சைகள் ஆதரவுடன் மீண்டும் அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முயற்சிக்கலாம்.
பகுஜன் சமாஜ்
இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தில் 16 தொகுதிகள் உள்ளன. பாஜகவுக்கு போன ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு என்ன என்பதை காட்டக் கூடியதுதான் இந்த பிராந்தியம். இங்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு 5% வாக்குகள் உள்ளன. இங்கு வெற்றி தோல்வியை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிதான் தீர்மானிக்கும். 2013 சட்டசபை தேர்தலில் இந்த 28-ல் 4 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் மேலும் 23 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
குதிரை பேரங்களால் பரபரப்பு
2013-ல் இந்த 28-ல் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருந்தது. 2018-ல் 28 தொகுதிகளில் ஒன்றில்தான் பாஜக வென்றது. இருந்தபோதும் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளன. அதேநேரத்தில் தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏக்களை ஏற்கனவே பாஜக வளைக்க தொடங்கிவிட்டதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் நாளை வெளியாகும் இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து மத்திய பிரதேச அரசியல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.