மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிதாப், மாதுரி, ப்ரீத்தி ஜிந்தா, நெஸ்லே அதிகாரிகளைக் கைது செய்ய அனுமதி!
பாட்னா: 'மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மற்றும் நடிக்க வைத்த நெஸ்லே நிறுவன அதிகாரிகள் இருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய பிகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் மீது புகார் தெரிவித்து பிகார் மாநில வழக்குரைஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸாஃபர்பூரின் லெனின் சௌக் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 30-ஆம் தேதி மேகி நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டேன்.
அதன் பிறகு, எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் குப்தா, இணை இயக்குநர் சபாப் ஆலம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மேகி நூடுல்ஸ் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும், என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, மாவட்ட தலைமை நீதிபதி ராமசந்திர பிரசாத் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் மேகி விளம்பரங்களில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்டோரையும், நெஸ்லே நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளையும் கைது செய்து கொள்ளவும் அனுமதி அளித்தார் நீதிபதி.