மகாராஷ்டிர முதல்வர் சவான் மனைவிக்கு ரூ.3000 வறட்சி நிவாரணம்
முதல்வர் பிரிதிவிராஜ் சவான் மனைவி சத்வஷீலாவுக்கு மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டம் பெடாக் கிராமத்தில் 2.5 ஹெக்டர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் விவசாயம் பொய்த்துப்போனதற்கு இழப்பீடாக 2011-12 ஆண்டிற்கான வறட்சி நிவாரணம் கிடைத்திருக்கிறது. மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் சத்வஷீலாவுக்கு 3 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை ஏமாற்றியதால் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியது. பாசனத்திற்கு போதுமான நீரின்றி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகின. இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக பயிர் இழப்பீடு வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பட்டங்ராவ் கடம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மோசமான வறட்சியால் மாநிலத்தில் 10ஆயிரம் கிராமங்களுக்கு 4ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.1.38 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிக்கிறது.
சத்வஷீலா இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் கூட இந்த தொகை நேரடியாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.