சபரிமலையில் மகரவிளக்கு பூஜை : மகர ஜோதி நாளில் குடில்கள் அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் குடில்கள் அமைத்து, சன்னிதானத்தில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காகவும் மகர ஜோதி தரிசனத்திற்காகவும் சன்னிதானத்தில் குடில்கள் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜை நடைபெற்று வருகிறது. கேரளா மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ஐயப்பனை தரிசனம் செய்ய 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மகர விளக்கு தினமான வருகிற14ஆம் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
மகரவிளக்கு நாளில், கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த, 5,000 பேருக்கு மட்டுமே மகரவிளக்கு நாளில் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவுக்கான கூப்பன் இல்லாமல் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் திருப்பி அனுமதிக்கப்படுவார்கள். ஜோதி தரிசனத்துக்காக குடில்கள் அமைத்து, சன்னிதானத்தில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் வாசு தெரிவித்துள்ளார். மகரவிளக்கு பூஜைக்காக திருவாபரண ஊர்வலம் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications