பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை
காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், புனரமைக்கப்பட்ட பாலத்தின் தரைப்பகுதியை மாற்றிவிட்டு அதை தாங்கி நிற்கும் கேபிளை மாற்றாமல்விட்டதே அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாக காரணம் என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்து இருக்கிறது.
குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 235 மீட்டர் நீளமும் 1.25 மீட்டர் அகலமும் கொண்ட தொங்கு பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது.
இந்த பாலம் அண்மையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. இதனை அஜண்டா கடிகார நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ஒரேவா குழுமம் பராமரித்து வந்து இருக்கிறது.

அறுந்த பாலம்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமான அளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் எடை அதிகரித்தது. இதனால் பாலம் அறுந்து விழவே அதன் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்தனர்.

135 பேர் பலி
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உட்பட 135 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து நேற்று வரை ஆற்றில் மீட்புப்பணிகள் தொடர்ந்தன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோடி ஆய்வு
நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருந்தார்.

9 பேர் சிறையிலடைப்பு
பாலம் அறுந்த விபத்து தொடர்பாக அதை பராமரித்த ஒரேயோ குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததார்கள், டிக்கெட் புக்கிங் செய்த கிளார்க், பாதுகாவலர் என 9 பேரை காவல்துறை கைது செய்தது. அவர்கள் 9 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை 14ம் தேதி உச்சநீதிமன்றமும் விசாரிக்க உள்ளது.

பழைய கேபிள்
இந்த விபத்து தொடர்பான தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறை நேற்று தாக்கல் செய்து இருக்கிறது. அதில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் சென்றதால் எடை காரணமாக பாலத்தை தாங்கி பிடித்து இருக்கும் முக்கிய கேபிள் அறுந்துவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

பாலத்தின் எடை
பாலம் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மக்கள் நடக்கும் தரைப்பகுதி மட்டுமே மாற்றப்பட்டதாகவும் கேபிளில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4 அடுக்கு கொண்ட அலுமினியம் விரிப்புகளை தரைக்காக பயன்படுத்தியதால் பாலத்தின் எடை அதிகரித்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications