மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதா? கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, திரிணாமுல் கட்சியினர் அதி தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.
சக்கர நாற்காலியில் பிரசாரம்
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி ஒன் வுமன் ஆர்மியாக மாநிலம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது காலில் அடிபட்டதால், காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கவனரிடம் மம்தா புகார்
பாஜகவின் மோடி, அமித்ஷா மம்தா பானர்ஜியும், மம்தா பானர்ஜி பாஜகவையும் தாக்கி பேசி வார்த்தையால் மோதிக் கொண்டனர். மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தபோது பாஜகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதாகவும், மக்களை ஓட்டு போட விடாமல் தடுப்பதாகவும் மாநில கவர்னரிடம் வாக்குச்சாவடியில் இருந்தபடியே போன் செய்து புகார் செய்தார் மம்தா பானர்ஜி.
வருமான வரி சோதனைக்கு கண்டனம்
இந்த நிலையில் ஹவுராவில் நடந்த பேரணியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனைக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
வங்கத்தை கைப்பற்ற முயற்சி
மோடி சிண்டிகேட் 1; அமித் ஷா சிண்டிகேட் 2 ஆவார்கள். இவர்கள் இருவரும் அபிஷேக்கின் வீடு, சுதீப்பின் வீடு மற்றும் ஸ்டாலினின் மகளின் வீட்டிற்கு ஏஜென்சிகளை அனுப்புகிறார்கள். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளை மாற்றி வருகின்றனர். உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குண்டர்களைக் கொண்டு குஜராத்திகள்(மோடி, அமித்ஷா) வங்காளத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். குஜராத்தை போல வங்காளத்தை கைப்பற்ற நாம் அனுமதிக்க கூடாது.
மக்கள் கவனமாக இருக்கணும்
மேற்கு வங்கத்தில் வகுப்புவாத குழப்பத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது: இதற்கு மக்கள் இடம் கொடுக்க கூடாது. கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது குறித்து பாஜகவினர் ஏதோ விளக்கம் கொடுக்கின்றனர். நான் உதவி பெற வேண்டிய விவசாயிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் ஏன் பணத்தை அனுப்பவில்லை? என்று மம்தா பானர்ஜி கூறினார்.