மம்தாவின் வாகனத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.. மே. வங்காளத்தில் அதிர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாகனம் செல்வதற்காக, சாலையில் இதய நோயாளியோடு ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இருந்து கொல்கத்தா செல்வதற்கு சாலை வழியாகப் பயணம் மேற்கொள்ளப் போகிறாரா அல்லது ஹெலிகாப்டரில் செல்லப் போகிறாரா என்பதில் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடித்தது.
இதனால், கொல்கத்தா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் போக்குவரத்தை அதிகாரிகள் முறைப்படுத்தினார். இதற்காக இதயம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸை போலீசார் சாலையின் ஓரமாக தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
இதயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்தும் ஆம்புல்ன்ஸ் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் மம்தா ஹெலிகாப்டரில் தான் கொல்கத்தா செல்கிறார் என்பது உறுதியானதும், அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை புறப்பட அனுமதித்தனர். அப்போது அந்த ஆம்புலன்ஸும் புறப்பட்டுச் சென்றது.
இடைப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸில் இருந்த பேகம் என்ற இதய நோயாளிக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அவர் சுமார் 20 நிமிடங்கள் மூச்சுவிடுவதற்கு சிரப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் காக்கும் வாகனமான ஆம்புலன்ஸிற்கு சாலையில் போக்குவரத்தைக் கூட மீறிச் செல்ல அனுமதி உண்டு. மனிதாபிமான அடிப்படையில் அதற்கு மற்ற வாகனங்களும் பாதை விடுவது வழக்கம். ஆனால், முதலமைச்சரின் வருகைக்காக ஆம்புலன்ஸ் நோயாளியோடு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.