பாஜக தலைவரை திடீரென சந்தித்த மமதா! ஒரு வேளை 'அப்படி' இருக்குமோ? காங். சிபிஎம் டவுட்
கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை திடீரென சந்தித்து பேசியிருப்பு அம்மாநில அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பாஜகவுக்கும்-திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே இருப்பது மோதல் போக்கு அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவின் 'பி' டீம் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பு இதனை உறுதி செய்திருப்பதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் இது 'மரியாதை நிமித்தமான' சந்திப்பு என பாஜக விளக்கமளித்துள்ளது.
மோதல் போக்கு
மேற்கு வங்கத்தில் கடந்த 2011லிருந்து மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த சுவேந்து அதிகாரி கடந்த 2020ம் ஆண்டு கட்சியிலிருந்து விலக பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இதனையடுத்து 2021ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் தலைவர் மமதா பானர்ஜியின் சொந்த தொகுதியான 'நந்திகிராம்' தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து தற்போது வரை பாஜகவுக்கும்-மமதாவுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
சகோதரன்
இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று திடீரென மமதா பானர்ஜி, சட்டமன்ற வளாகத்தில் உள்ள சுவேந்து அதிகாரியின் அறைக்கே சென்று அவரை சந்தித்து பேசினார். இத்தனை நாட்களாக பாம்பும்-கீரியுமாக சண்டையிட்டு கொண்டவர்கள் திடீரென இப்படி சந்தித்துக்கொண்டது மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக 'அரசியலமைப்பு தின' நிகழ்ச்சிக்கான கூட்டத்திற்கு பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், எனவே இக்கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் பாஜக கூறியிருந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், முதலமைச்சர் தன்னை ஒரு 'சகோதரனை' போல நடத்தியதாகவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் உடன்படிக்கைக்கு வந்திருப்பதாகவும், அதன் வெளிப்பாடே இந்த கூட்டம் என்றும் விமர்சித்திருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமுர்சன் சவுத்ரி, "பிரதான் மந்திரி கிராம ஆவாஸ் யோஜனா திட்டத்திற்காக நிதி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம்
இதனையடுத்து வரும் 4ம் தேதி பிரதமரை மமதா பானர்ஜி சந்திக்கிறார். இன்று சுவேந்துவை சந்தித்திருக்கிறார். இவையனைத்தும் மமதா-மோடி இணைப்பபை காட்டுகிறது" என்று கூறியுள்ளார். அதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்படிக்கை இருக்கிறது என்பதை இந்த சந்திப்பு உறுதி செய்துள்ளது" என்று கூறியுள்ளார். மாநிலத்தில் கடந்த 1977ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிபிஎம் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.