டாக்காவிலிருந்து வந்த மமதா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அதிரடி கைது
கொல்கத்தா: பொருளாதார குற்ற வழக்கு ஒன்று தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் மிக நெருக்கமான உதவியாளரான சிபாஜி பாஞ்சாவை கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். பாஞ்சா, வங்கதேசம் போய் விட்டு டாக்காவிலிருந்து கொல்கத்தா திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
மமதாவின் வங்கதேச பயணத்தின்போது அவருடன் பாஞ்சாவும் சென்றிருந்தார். பாஞ்சா ஒரு தொழிலதிபர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மமதாவின் நெருங்கிய வட்டத்தில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளார்.
இவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி 19ம் தேதி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர் சில தொலைக்காட்சி சேனல்களில் முதலீடு செய்துள்ளார். அவரது சில நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது பொருளாதாரக் குற்ற வழக்குப் பதிவானது.
ரூ. 1400 மதிப்பிலான, கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநராகவும் பாஞ்சா இருக்கிறார். மேற்கு வங்கத்தில் ஒரு உள்ளூர் கேபிள் சானலையும் அவர் நிர்வகித்து வருகிறார்.
கொல்கத்தா வந்து சேர்ந்த பாஞ்சாவை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை தற்போது டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
2011 தேர்தலின்போது மமதாவின் பிரசாரத்தை முன்னின்று மேற்கொண்டவர் பாஞ்சாதான். மேலும் மா மாதி மானுஷ் என்ற பிரபலமான வாசகத்தை உருவாக்கியவரும் இவர்தான். மமதாவின் மிக நெருக்கமான ஆதரவாளர்களில் இவரும் முக்கியமானவராம். அவரை போலீஸார் கைது செய்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.