'பஞ்ச பாண்டவர்கள்..' மம்தாவின் திரிபுரா கனவை நிறைவேற்ற ஐபேக்கின் புதிய மாஸ்டர் பிளான்.. மிரளும் பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்கத்தைத் தாண்டி, பிற மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்க்க நினைக்கும் மம்தா பானர்ஜி, இதற்காகப் பஞ்ச பாண்டவர்கள் (Panch Pandav) என்ற ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணியைக் கட்டமைக்க முயன்று வருகிறார். இதற்காகக் கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களையும் சந்தித்திருந்தார்.
இது தவிர, மறுபுறம் திரிணாமுல் கட்சியையும் மேற்கு வங்கத்தைத் தாண்டியும் வளர்க்க அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு அவரது முதல் குறி திரிபுரா மாநிலம் தான்.

மம்தா பானர்ஜி
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்க பாஜக தீவிரமாகக் களமிறங்கியது அனைவருக்கும் தெரியும், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டு இருந்தனர். இருந்தாலும், பாஜகவால் 100 இடங்களில் கூட மேற்கு வங்கத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்ற மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றார்.

அதிரடி காட்டும் மம்தா
இந்தச் சூழலில் தான், தேசியளவிலும் பாஜகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க அவர் திட்டம் போட்டு காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். இதற்காக டெல்லி சென்ற மம்தா, கடந்த வாரம் சோனியா காந்தி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜனநாயகத்தைக் காக்க பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருந்து சந்திக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தேசிய அளவில் கூட்டணி அமைப்பதோடு மட்டும் விட்டுவிடாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மம்தா பானர்ஜி இறக்கிவிட்டார். இதற்கு அவர் முதலில் குறி வைத்துள்ளது திரிபுரா மாநிலம் தான். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் திரிபுரா மாநிலத்தில் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மம்தா எடுக்கத் தொடங்கிவிட்டார். இதற்காக ஐபேக் நிறுவனத்துடன் மம்தா மீண்டும் கைகோர்த்துள்ளார்.

ஐபேக் குழு
முதற்கட்டமாக 20 நபர்களைக் கொண்ட ஐபேக் குழு திரிபுரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு தற்போதுள்ள பாஜக அரசின் மீது மக்களின் மனநிலை எப்படி உள்ளது, மக்களின் பிரச்சினைகள், குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜிக்கும் திரிபுராவில் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த அறிக்கை மற்றும் திரிபுராவில் வளர்ச்சியடைய திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ரிப்போர்ட்டையும் மம்தாவுக்கு அளித்துள்ளது ஐபேக் குழு.

பஞ்ச பாண்டவர்கள்
அந்தக் குழு அளித்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் மம்தா அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டார். திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸை வலுப்படுத்தும் வகையில் பஞ்ச பாண்டவர்கள் (Panch Pandav) என்ற அணியை மம்தா அமைத்துள்ளார். இந்தக் குழுவில் மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக், கல்வி அமைச்சர் பிராட்டியோ பாசு, திரிணாமுல் வர்த்தக பிரிவின் வங்க தலைவர் ரிடோப்ரட்டா பட்டாசார்ஜியா மற்றும் முன்னாள் எம்எல்ஏ சமீர் சக்ரோபோர்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திரிபுரா மாநிலம் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தொகுதிகளில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு ஒருவருக்கு என்று பிரித்து அளிக்க திரிணாமுல் தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாகத் திரிபுராவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என அந்தக் குழுவுக்குக் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மம்தாவின் இந்த நடவடிக்கைகள் திரிபுராவை ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பதிலடி
திரிபுராவில் மம்தாவை தடுக்க அம்மாநில பாஜக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. முதலில் சர்வே எடுத்துக் கொண்டிருந்த ஐபேக் குழுவினரை விடுதியிலேயே வைத்து முடக்கியது திரிபுரா போலீசார். ஐபேக் குழுவினர் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றும் தேவையில்லாத கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி, சமீபத்தில் திரிபுரா மாநிலத்திற்குச் சென்றிருந்தார். உதய்பூரில் உள்ள திரிபுரேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்துவிட்டுத் திரும்பிய சமயத்தில் சில பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஒருவர் காயமடைந்திருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார் அபிஷேக் பானர்ஜி.

திரிணாமுல் அதிரடி
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, திரிபுராவில் காலூன்றும் திரிணாமுல் காங்கிரஸின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்று பதிலடி கொடுத்துள்ளது. ஆனாலும், வெறும் பேச்சில் மட்டும் கவனம் செலுத்தாமல் களத்திலும் இறங்கி திரிணாமுல் காங்கிரஸ் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. இந்த பஞ்ச பாண்டவர்கள் குழுவில் இருக்கும் திரிணாமுல் தலைவர்களில் சிலர், ஏற்கனவே திரிபுரா சென்று, அங்கு மக்களைச் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். வரும் வாரங்களில் மற்ற தலைவர்களும் திரிபுராவுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் பிளான்
அதேபோல திரிபுரா மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எனத் தனியாகவும் ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வங்க மொழி பேசுபவர்கள் வசிக்கின்றனர். இத்துடன் தற்போது அரசுக்கு எதிராக நிலவும் மனநிலையும் சேர்ந்து கொண்டால், வரும் 2023 தேர்தலை எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றே திரிணாமுல் நினைக்கிறது.












Click it and Unblock the Notifications