ஐ.பி.எஸ் கனவிற்காக 52 லட்ச ரூபாய் வேலையை உதறிய இந்தியர்!
வினாயக் வர்மா என்னும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு பாரிஸில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். அங்கு அவருக்கு ஆண்டொன்றுக்கு சம்பளம் ரூபாய் 52 லட்சம்.
ஆனால் அவரது கனவு ஐபிஎஸ் அதிகாரி ஆவதுதான். இதற்காக கடுமையாக தயாராகி வந்தார். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், அதனை பொருட்படுத்தாது படித்து வந்த வினாயக் கடந்த 2012 ஆம் ஆண்டின் அரசு பணியாளர் தேர்வில் முதல் முறையிலேயே வெற்றி பெற்றார்.
மீண்டும் கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்வு எழுதி 187ஆவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தார். இந்நிலையில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பிய அவர் தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பணிநிலை அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேல் அகடாமியில் காவல்துறை பணிக்கான பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த வெற்றியானது தனக்கு கிடைத்த காரணம், எதையும் தெளிவாக புரிந்துகொள்ளாமல் படிப்பதை விட, உற்று நோக்கியும், தெளிவாக கேட்டறிந்தும் கற்றதுதான் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே குடிமைப்பணிகளில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வினாயக் ஒரு பிள்ளையார் சுழி என்றால் மிகையாகாது.