சியாச்சினில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: பாரிக்கர் திட்டவட்டம்
டெல்லி: சியாச்சின் பனிமலை சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் இரவு, பகல் பாராமல் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 23 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பனிமலையில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுவதால் அங்கிருந்து ராணுவ படைகள் விலக்கிக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், படைகளை வாபஸ் பெற முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாரிக்கர், பாகிஸ்தானை நம்ப முடியாது என்பதால் சியாச்சின் சிகரத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்படமாட்டாது.
நாம் படைகளை வாபஸ் பெற்றுவிட்டால், அதனை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் படைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துவிடலாம். அதன் பின்னர் நாம் மேலும் பல உயிர்களை இழக்க வேண்டியிருக்கும். 1984ல் (சியாச்சின் போர்) என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, பாகிஸ்தானை நம்ப முடியாது என கூறினார்.
அண்மையில் சியாச்சின் பனிமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இந்திய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இனிமேலும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கோரிக்கை விடுத்திருந்தார். அதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாரிக்கர், சியாச்சின் பனிமலை சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை தற்போது உள்ள நிலையே அங்கு தொடரும் என்றார்.