அடிச்சு தூக்கும் பாஜக.. குஜராத்தில் மீண்டும் தாமரை.. 117 - 140 இடங்களில் வெற்றி பெறும்: நியூஸ் எக்ஸ்
குஜராத் தேர்தலில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது
காந்திநகர்: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.. அதேபோல, இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது..
குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 2012 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த தொகுதிகளிலிருந்து, காங்கிரஸ் 16 தொகுதிகளை வென்றெடுத்திருந்தது... ஆனால், 2017 தேர்தலுக்கு பிறகு, திடீர் சறுக்கல் காங்கிரஸில் ஏற்பட்டது. இதற்கு காரணம், 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்போது பாஜகவுக்கு தாவியிருந்ததுதான்..
கடந்த தேர்தலிலும், பாஜக இங்கு வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்தது.. அதனால்தானோ என்னவோ, இந்த முறை குஜராத்தில் தேர்தல் என்றதுமே, மேலிட தலைவர்கள் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தினார்கள்.
பாஜகவுக்கு பேரிழப்பு.. டெல்லியை தட்டித்தூக்கும் ஆம்ஆத்மி! மாநகராட்சி தேர்தல் கருத்துக்கணிப்பு ரிலீஸ்
7வது முறை
பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பதால் இந்த முறை தேர்தலில் எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன.. 6 முறை குஜராத்தை ஆக்கிரமித்து கொண்ட பாஜக, 7வது முறையும் அரியணை ஏறுவதற்கான ஆசையை வளர்த்து கொண்டுள்ளது.. அதற்கான முயற்சியையும் கையில் எடுத்தது.. அதிரடி அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் பிரச்சாரங்கள் என 3 வகைகளில் தங்கள் வியூகங்களை படரவிட்டனர்.. முக்கியமாக பிரதமர் மோடி, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில்தான், அதிக அளவுக்கு இங்கேயே முகாமிட்டிருந்தார்.
3 காரணங்கள்
இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.. பாஜகவின் சொந்த பிரமுகர்களே, சீட் கிடைக்காததால் அப்செட் ஆனதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.. மற்றொரு பக்கம், மோர்பி பாலம் விபத்தும், அதையொட்டி எழுந்த விமர்சனங்களும் பாஜகவை நிஜமாகவே கலங்கடித்துவிட்டன.. அதனால், இந்த தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அடுத்ததாக, இந்த தேர்தலிலும் வென்றால், 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை பாஜக நெருங்கிவிடும் .. இந்த 3 பிரதான விஷயங்களை முன்னிறுத்தியே பாஜக, தன் ஆபரேஷனை இங்கு தொடங்கியது.
செல்வாக்கு
இந்த தேர்தலில் பாஜக வெற்றி வெற்றால், இந்த வெற்றியின் தாக்கம் அப்படியே 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் வலியுறுத்தியபடியே உள்ளனர்.. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தாலும், தொங்கு பால விபத்துக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி பாஜக தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்குமா என்பது மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக இருந்து வருகிறது..
விலைஉயர்வு
அதுமட்டுமல்ல, மத்திய பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தொடர்ந்து பாதித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல். டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொது பிர்ச்னைகளை குஜராத் மாநில மக்கள் அதிகமாகவே சந்தித்து வரும்நிலையில், இதைதான் காங்கிரஸ் தன்னுடைய பிரச்சாரமாகவே கையில் எடுத்தது..
மெஜாரிட்டி
இன்னொரு பிரதான பிரச்சனையும் பாஜகவுக்கு உள்ளது.. இந்த மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இதில், 40 தொகுதிகள் தனித்தொகுதிகள்... இந்த 40 தொகதிகளிலும் வெற்றி பெற்றால், ஆட்சியை எளிதாக கைப்பற்றி விடலாம் என்பது பரவலான கருத்து.. ஆனால் இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை... மற்றொருபுறம், சிறுபான்மையினர் வாக்குகள் என்பது பாஜகவுக்கு எந்த அளவுக்கு டிரான்ஸ்பர் ஆகும் என்று தெரியவில்லை.. காரணம், இந்த முறை ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட களத்தில் பாஜக இறக்கவில்லை..
முஸ்லிம் வேட்பாளர்கள்
இதற்கு நட்டா ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "பாஜக முஸ்லிம் ஆளுநர்களையும் நியமனம் செய்து இருக்கிறது. எனவே நாங்கள் அனைவருக்குமான வளர்ச்சியை பின்பற்றுகிறோம். அதேபோல், தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்பது முழுக்க முழுக்க வெற்றி வாய்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டது" கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸோ, 6 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது..
சிறுபான்மையினர்
புதிதாக களமிறங்கும் ஆம் ஆத்மியும் 2 பேரை அறிவித்த நிலையில், பாஜகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் எந்த அளவுக்கு கை கொடுக்க போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.. இப்படி எத்தனையோ யூகங்களும், அனுமானங்களும் வலம்வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது.. அதன்படி, நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது..
பாலம்
இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.. அதாவது, காங்கிரசுக்கும், பாஜகவுக்குமான வெற்றி விகிதம் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது.. அப்படியானால், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையே, விலைவாசி உயர்வு, தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழப்புகளோ, முஸ்லிம் வேட்பாளர் ஒருத்தருக்கும் வாய்ப்பு தராததோ, குஜராத் பாஜகவின் வெற்றி வாய்ப்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றே கணிக்க முடிகிறது.. தேர்தலுக்கு முந்தைய மற்றும், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், மீண்டும் ஒருமுறை குஜராத்தை பாஜக எட்டிப்பிடிக்கும் என்றே தெரிகிறது.