"கீழ்த்தரமான அரசியல்" என்பதை "கீழ் ஜாதி" என மாற்றி பொய் பிரசாரம் செய்வதா? மோடிக்கு மாயாவதி கண்டனம்
லக்னோ: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஜாதியை பயன்படுத்தி ஆதாயம் அடைய பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முயற்சிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா மோடியை விமர்சிக்கும் போது கீழ்த்தரமான அரசியல் செய்வதாக (நீச்ச ராஜநீதி) குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் நரேந்திர மோடியோ தம்மை "கீழ் ஜாதி" (நீச்ச ஜாதி) என்று கூறி விமர்சனம் செய்கின்றனர் என்று மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி கூறியதாவது:
கீழ்த்தரமான அரசியல் செய்வதாக மோடியை பிரியங்கா விமர்சித்தார். ஆனால் மோடியோ தம்மை கீழ்ஜாதிக்காரர் என்று கூறுவதாக பிரசாரம் செய்கிறார். பாரதிய ஜனதா என்றுமே பின்தங்கிய ஜாதியை சேர்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் கட்சியாகும்.
அக்கட்சி தற்போது மோசமான யுக்தியை கையாண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது. கீழ்த்தரம் என்பது அரசியலில் பின்தங்கிய ஜாதி என்று அர்த்தம் இல்லை. மோடி இதை திரித்து ஜாதியுடன் தொடர்பு படுத்தி அரசியல் லாபம் அடைய நினைக்கிறார்.
மோடி எந்த பள்ளிக்கூடத்திற்கு போனார்? அவர் படித்த பள்ளியில் ஒன்று நல்ல ஆசிரியர் இருந்திருக்க மாட்டார். அல்லது இவர் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்திருப்பார். கீழ்த்தரம் என்பதை பின்தங்கிய ஜாதி என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்?
மோடி இவ்வாறு கீழ்த்தரமாக பேசுவதற்கு படிக்காதது தான் காரணமா? இந்த விவகாரத்தில், தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதற்காக காங்கிரஸ் வாய்மூடி மவுனமாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சொல்லிக் கொள்ளும் சமாஜ்வாடி கட்சியும் வாய்மூடிக் கிடக்கிறது. ஆகையால் இந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். உண்மையில் மோடி என்ன ஜாதி என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.