ராகுல் காந்தியை விமர்சிப்பதா? பிஎஸ்பி மூத்த தலைவரின் கட்சிப் பதவியை அதிரடியாக பறித்த மாயாவதி!
ராகுல் காந்தியை விமர்சித்த பகுஜன் மூத்த தலைவரின் கட்சிப் பதவியை பறித்தார் மாயாவதி.
லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதால் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஜெய் பிரகாஷ் சிங்கை அதிரடியாக நீக்கியுள்ளார் மாயாவதி.
லோக்சபா தேர்தலை முன்வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்கள் வகுத்து வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டத்தில் பேசிய அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெய் பிரகாஷ்சிங், ராகுல் காந்தியின் தாயார் வெளிநாட்டவர்; அவரால் நாட்டின் பிரதமராக முடியாது; வரும் லோக்சபா தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என அதிரடியாக பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உத்தரப்பிரதேசத்திலும் இதர மாநிலங்களிலும் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை நாங்கள் அறிவிக்கவில்லை. அதனால் கட்சியின் நிர்வாகிகள் கூட்டணி குறித்து எதுவும் பேசக் கூடாது.
கூட்டணி குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்கும். ஜெய் பிரகாஷ்சிங்கின் பேச்சு பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. இதர கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது. ஆகையால் ஜெய்பிரகாஷ்சிங் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்றார்.